தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்களின் விவரம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மழை தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (நவ 9) முதல் 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நாளை (நவ. 10) முதல் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மறுநாள் (நவ. 10) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.