தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத் தீவுகளுக்கு இடையே காணப்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வானிலை அறிக்கை
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதுவும் கடலோர மாவட்டங்கள் உட்பட மற்ற உள் மாவட்டங்களும் இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இன்று (நவ.4) புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நவ.5ம் தேதியன்று தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நவ.6ம் தேதியன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், சேலம், தருமபுரி, நாமக்கல் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.7ம் தேதியன்று கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நவ.6 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
நவ.8ம் தேதியன்று டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை தகவல் அளித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில நேரங்களில் கனமழையும் காணப்படும். அதனால் சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.
இதற்கிடையில் கடந்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், கோவை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்துள்ள மழையளவு சென்டி மீட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
04.11.2021 முதல் 06.11.2021 வரை கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
05.11.2021 முதல் 07.11.2021 வரை, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடகா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
08.11.2021ம் தேதி தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.