தமிழகத்தில் வார இறுதி முழு ஊரடங்கு நீக்கம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை அன்று அமலில் இருந்து வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள், வரும் நாட்களில் கொரோனா பாதிப்புகள் குறையும் பட்சத்தில் நீக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு நீக்கம்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலை மற்றும் கொரோனா தொற்றின் உருமாறிய ஓமைக்ரான் வகை தொற்றின் தாக்குதல் அதிகரித்து வந்ததால் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தற்போது இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகிறது. தமிழத்தின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மிகவும் கவலை அளிக்க கூடிய வகையில் இருந்ததால் இந்த கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல், கடந்த ஜனவரி 9 மற்றும் 16ம் தேதிகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அன்றைய தினங்களில் மிகவும் அத்தியாவசிய தேவைகளான பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற அனைத்து வித செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டு இருந்தது. முழு ஊரடங்கினால் வணிகர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் ஞாயிறு முழு ஊரடங்கை நீக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 23ம் தேதியான இன்றும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முதல்வர் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதனால் இன்று காலை முதல் அரசின் விதிகளுக்கு உட்பட்டு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126ம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராசர் சாலையில் உள்ள நேதாஜியின் படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்த வந்திருந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மக்கள் நல்ல முறையில் தங்கள் ஒத்துழைப்பை அளிக்கிறார்கள். நாட்டின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும் பட்சத்தில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.