![மார்ச் 28, 29ம் தேதிகளில் மத்திய அரசு & வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் - பொதுமக்கள் அதிர்ச்சி! மார்ச் 28, 29ம் தேதிகளில் மத்திய அரசு & வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் - பொதுமக்கள் அதிர்ச்சி!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/மார்ச்-28-29ம்-தேதிகளில்-மத்திய-அரசு-.jpg)
மார்ச் 28, 29ம் தேதிகளில் மத்திய அரசு & வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் – பொதுமக்கள் அதிர்ச்சி!
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 28,29ம் தேதிகளில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தம்:
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. நாட்டில் வங்கிகள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அதனால் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் பகுதி நேரமாக 50% ஊழியர்களை கொண்டு இயக்கப்பட்டு வந்தது. மேலும் வங்கிகளில் கூட்டத்தை தவிர்க்கும் வண்ணம் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் வங்கி சேவைகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக கடந்த ஆண்டே தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இவைகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மார்ச் 28,29ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும், வங்கிச் சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி மற்றும் கிளை அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் குறைந்த அளவு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.