Reliance Jio தலைமை பொறுப்பில் இருந்து விலகிய முகேஷ் அம்பானி – புதிய தலைவர் நியமனம்!
தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அந்த இடத்தில் அவரது மகன் ஆகாஷ் அம்பானி பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆகாஷ் அம்பானி
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்களின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்திருந்த இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி இப்போது அந்த பொறுப்பை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
இப்போது அவருக்கு பதிலாக ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் ஜூன் 27 முதல் முகேஷ் அம்பானி இந்நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்வதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் அறிவித்தது. அதே நேரத்தில் ஜூன் 27 அன்று நடந்த கூட்டத்தில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆகாஷ் அம்பானியை குழுவின் தலைவராக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்தது.
இந்நிறுவனத்தின் மற்ற நியமனங்களில், பங்கஜ் மோகன் பவார் ஜூன் 27 முதல் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஜியோ நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆகாஷ் அம்பானி , அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் ஜியோவின் 4ஜி திட்டத்தை சுற்றி டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் நெருக்கமாக ஈடுபட்டு வந்தார்.
தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரிசோதனைகள் – அமைச்சர் அறிவிப்பு!
குறிப்பாக, கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவை மையமாகக் கொண்ட ஜியோஃபோனை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதில் அவர் பொறியாளர்கள் குழுவுடன் நெருக்கமாக ஈடுபட்டார். இது பலரை 2ஜியிலிருந்து 4ஜிக்கு அழைத்துச் செல்லும் ஒரு புரட்சிகர சாதனமாக மாறியது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் இடத்தில் ஜியோவால் செய்யப்பட்ட முக்கிய கையகப்படுத்துதல்களுக்கு அவர் தனிப்பட்ட முறையில் தலைமை தாங்கினார். தவிர AI-ML மற்றும் பிளாக்செயின் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதில் அவர் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.