தமிழக காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை – முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்!
தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் உட்பட அனைவருக்கும் இனி வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விடுமுறை அறிவிப்பு
பொதுவாக அரசுத்துறைகளில் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கக்கூடிய காவல்துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு விடுமுறை என்பது அதிசயமான விஷயம் தான். அப்படி ஓடிக்கொண்டிருக்கும் காவல்துறை ஊழியர்களுக்கு மாதத்தில் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களது ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் எனவும் சமீபத்தில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது, அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தீவிரமாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – கொரோனா அதிகரிப்பு!
இது தவிர காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு உதவியாகவும், காவல் நிலையங்களுக்கு வருபவர்களை வரவேற்கும் விதத்திலும் வரவேற்பாளர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் அறிவித்த விரிவான அறிவிப்பின் கீழ், ‘சென்னையில் சைபர் குற்றங்களை புலனாய்வு செய்வதற்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் உருவாக்கப்படும். மெரினா கடற்கரையில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு உருவாக்கப்படும்.
சமூகத்தில் வழிதவறி நடக்கும் சிறுவர்கள், சிறுமியர்களை தடுப்பதற்கு 51 சிறார் மன்றங்களும், குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு அமைக்கப்படும். கடலோர காவல் படையுடன் சுமார் 1000 மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையினராக பணியமர்த்தப்படுவர். காவல் ஆணையம் அமைக்கப்படும். பொதுமக்கள், இணையதளம் வழியாக காவல்துறை அதிகாரிகளிடம் புகார்களை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா தளங்களுக்கான சிறப்பு காவல்துறை உருவாக்கப்படும்.
தமிழகத்தில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி நிபந்தனைகள் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது இருக்கும் வழக்குகள் திரும்ப பெறப்படும். காவலர்களுக்கான இடர்படி உயர்த்தப்படும். காவலர் முதல் ஆய்வாளர் வரையுள்ள அனைத்து ஊழியர்களும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்காக நவீன அடையாள அட்டை கொடுக்கப்படும். காவலர்களுக்கென சிறப்பு குறைதீர்ப்பு முகாம்கள் அமைக்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.