இந்தியாவில் 2025-26 ஆம் ஆண்டில் 10 லட்சம் வேலை வாய்ப்பு – உற்பத்தி திறன் ₹24 லட்சம் கோடி உயர்த்த இலக்கு!
நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல திட்டங்களை அமல்படுத்தி இருக்கும் நிலையில் 2025-26 ஆம் ஆண்டிற்கு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திறனை ₹24 லட்சம் கோடியாக உயர்த்த அரசு இலக்கு வைத்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு
இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசு பல நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பெங்களூருவில் நடந்த விழாவில் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில் நாடு இன்று ஒரு மாற்றத்தில் உள்ளது. அது வரலாற்றில் மிகவும் உற்சாகமான காலம் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் 2025-26 ஆம் ஆண்டிற்குள் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திறனை ₹24 லட்சம் கோடியாக உயர்த்துவது தான் பிரதமரின் இலக்கு என தெரிவித்தார்.
அதன் பின் பேசிய அவர் இதன் மூலம் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்தார். மேலும் 110 யூனிகார்ன்கள் உட்பட 90,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் இருக்கின்றன. அதில் இளைஞர்கள் அதிகம் பங்கு வகிக்கிறார்கள் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கர்நாடகாவைச் சேர்ந்த குறைந்தது 15 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த எதிர்காலத் திறன்களில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.