தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை – செப்.17 வரை உஷார்! – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் செப்.17 ஆம் தேதி வரையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம், புதுச்சேரி மற்றும் கரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இந்த கனமழை செப்.17 ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தை காட்டிலும் 3 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், ஆங்காங்கே மழைப்பொழிவு இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கனமழையின் எதிரொலியால் தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.