மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி உதவித்தொகைக்கு மார்ச் 31 கடைசி நாள்!
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை பெற முடியாத அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் மார்ச் 31ம் தேதிக்குள் தங்களது கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டது. ஆனாலும் தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா, ஓமிக்ரான் வைரஸ்கள் மேலும் தொற்று பாதிப்பை அதிகரித்து பள்ளிகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அரசு கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. அதன் படி தற்போது இந்தியாவில் 15 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை பெற முடியாத மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை சமர்ப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்கு மாதம் ரூ.2,250 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல், கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் இந்த கல்வித் தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டது. அரசு ஊழியர்கள் சிஇஏ-வுக்கு கிளெயிம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் கிளெயிம் செய்ய தேதி நீட்டிக்கப்பட்டது. கல்வி உதவித்தொகையைப் பெற, மத்திய ஊழியர்கள் பள்ளிச் சான்றிதழ் மற்றும் கோரிக்கை ஆவணங்களைச் மார்ச் 31க்கும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.