அதிரடியாக உயர்ந்த முட்டை விலை – கோடை வெப்பம் எதிரொலி!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் முட்டையின் விலை கடந்த சில நாட்களில் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், சில்லறை வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முட்டை விலை:
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிக அளவிலான கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வணிக தேவைக்கான கோழிகள் மற்றும் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கிருந்து தான் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தினசரி சுமார் 6 கோடி அளவிலான முட்டைகள் நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலையின் படி தான் முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 6 நாட்களில் முட்டையின் விலை பல்வேறு முறை உயர்ந்து பண்ணை கொள்முதல் விலை தற்போது ரூ.4.35 காசுகளாக உள்ளது. தற்போதைய கோடை வெப்பம் அதிகரிப்பு மற்றும் மீன் பிடி தடை காலம் காரணமாக முட்டை தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தான் முட்டை விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.