அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு தடை – சென்னை மாநகர காவல்துறை!
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை பெசன்ட் நகரில் நாளை (செப்டம்பர் 7) நடைபெற இருக்கும் அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர் திருவிழா
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்துள்ள சூழலில், 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. அந்த வகையில் சென்னை பெசன்ட் நகரில் நாளை (செப்டம்பர் 7) நடைபெற இருக்கும் அன்னை வேளாங்கண்ணி திருவிழாவில் மக்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
செப்.8 முதல் 12 வரை தொடர்ந்து 5 நாட்கள் வங்கி விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் அன்னை வேளாங்கண்ணி தேர்திருவிழா இந்த ஆண்டும் 49 ஆவது ஆண்டாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கியுள்ள நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக தேர் திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், ‘இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொது மக்களின் பாதுகாப்பு கருதி அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழாவில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. அதனால் நாளை (செப்டம்பர் 7) நடைபெற இருக்கும் தேரோட்ட நிகழ்ச்சிக்கு பொது மக்களின் வருகை தடை செய்யப்படுகிறது. அதனால் பக்தர்கள் தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சி மூலம் கண்டுகளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பூஸ்டர் தேவையா?
தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிக்கு வருவதும் தடை செய்யப்படுகிறது. குறிப்பாக அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், வளாகங்கள், கடைகள் அனைத்தும் செப்டம்பர் 8 வரை மூடப்பட்டிருக்க வேண்டும். எனவே பொது மக்கள் அனைவரும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.