தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் (CPS) ரத்து – மார்ச் 22 இல் போராட்டம்!
தமிழகத்தில் நேற்று மாலை, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) தமிழ்நாடு மாநிலப் பொதுக்குழு கூட்டம், சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி மார்ச் 22ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டம் (CPS) ரத்து:
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக அளிக்கப்பட்டு வந்தது. இதனால் ஏராளமானோர் பலனடைந்து வந்தனர். இதனிடையே, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ஆம் முதல் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் சார்பில் சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ரயில்களில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – முன்பதிவில்லா பெட்டிகள் சேவை தொடக்கம்!
மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும்,STFI மாநில ஒருங்கிணைப்பாளருமான தோழர் ச.மயில் தலைமையில் தமிழ்நாடு மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் மார்ச் 22ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மேலும் CPS ரத்து,NEP2020 ரத்து, பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மக்கள் நலன்,தேச நலன்,ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட ஊழியர் அமைப்புகள் மார்ச் 28, 29 ஆகிய இரு நாட்கள் நடத்துவதாக அறிவித்துள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் ஆர். பெருமாள்சாமி, பொதுச்செயலாளர் தோழர் சே.பிரபாகரன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அ. சங்கர்,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். பிரபுதாஸ்,தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் த. உதயசூரியன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் செ.நா.ஜனார்த்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.