தமிழக ரயில் நிலையங்களில் கொரோனா ‘ஸ்கேனர் கருவி’ – நிர்வாகம் நடவடிக்கை!
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அதிகளவு உடல் வெப்பநிலையுடன் வரும் பயணிகளை கண்டறியும் நோக்கத்தில் ஒரு ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இவை பயணிகளின் உடல் வெப்பநிலையை கண்டறிவதுடன், அவர்களின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.
எச்சரிப்பு கருவி
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது குறைந்து வருவதால், மாநிலம் முழுவதுமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து மீண்டுமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் 40 க்கும் மேற்பட்ட ரயில்களால், ரயில் நிலையங்களில் அதிகளவு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இது தவிர வெளிமாநிலங்கள் செல்பவர்கள், அங்கிருந்து வருபவர்களது எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கல் – அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
இதை கவனித்த கோவை ரயில்வே நிர்வாகம் பயணிகளின் உடல் வெப்பநிலையை கண்காணித்து எச்சரிக்கை கொடுக்க ஸ்கேனர் மற்றும் கேமரா கருவியை பொருத்தியுள்ளது. இந்த கருவிகளை பயணிகள் தாண்டி செல்லும் போது, அவர்களது உடல் வெப்பநிலை மற்றும் புகைப்படம் தானாகவே அதில் பதிவாகி விடுகிறது. அந்த தகவல்களை ரயில்வே அதிகாரிகள் கணிப்பொறி மூலம், குறிப்பிட்ட மையத்தில் இருந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட பயணிகள் அந்த கருவி வழியாக கடந்து செல்கையில் அதிகளவு வெப்பநிலை கண்டறியப்படுமாயின், எச்சரிக்கை ஒலி தானாகவே அடிக்கும்.
TN Job “FB Group” Join Now
பின்னர் அந்த பயணிகளை கண்டறிந்து அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த வசதியை சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ரயில்வே நிலையங்களிலும் பொருத்துவதற்கு சேலம் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் மூலமாக கொரோனா பரவுவதை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை உட்பட மூன்று ரயில்வே நிலையங்களில் இந்த ஸ்கேனர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை மேலும் அதிகரிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.