இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் – ஓரு விரிவான பார்வைக்கு!
கொரோனா 2 ஆம் அலையை மீண்டு வந்த இந்தியாவில் தற்போது புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதுடன், மாநிலங்கள்தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு
கொரோனா 2 ஆம் அலையில் இருந்து இந்தியா தற்போது மீண்டு வருகிறது. கொரோனா அலையால் இந்தியா மிகப்பெரும் பாதிப்புகளை சந்தித்து வந்த போது, இதை விட மிகப்பெரும் இழப்புகள் ஏற்படும் என்பது பலரது கணிப்பாக இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும், தடுப்பூசிகளின் உபயோகம் மூலமாக கொரோனாவை வென்று பல உலக நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது.
அரசு நிலக்கரி நிறுவனத்தில் 1086 காலியிடங்கள் – 7 ஆம் வகுப்பு முடித்தால் போதுமானது!!
அந்த வகையில் நம் நாட்டில் கொரோனா புதிய பாதிப்புகளின் விகிதமானது சரிவை கண்டுள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) கருத்துப்படி, இப்போது நாடு முழுவதும் 10,26,159 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில், நோய் தொற்றிலிருந்து இன்று வரை 95.26 சதவீதம் பேர் மீண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த காலங்களில் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து இப்பதிவு விளக்குகிறது.
அந்த வரிசையில் ஒடிசா மாநிலத்தில் ஜூன் 17 முதல் ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்ற நிலையில், தெலுங்கானா, ஜார்கண்ட் மற்றும் நாகாலாந்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புது தில்லியை பொருத்தளவு, தேசிய தலைநகரில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் இன்று (ஜூன் 14) முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 50% இருக்கை வசதிகளுடன் உணவகங்கள் செயல்பட முடியும். மால்கள் இப்போது வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும்.
அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகளும் மீண்டும் திறக்க அனுமதி அளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஜூன் 21 வரை மூடப்படும் எனவும் ஜிம்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சினிமா திரையரங்குகள் மற்றும் பொது பூங்காக்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலத்தின் 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள் மற்றும் பொது பூங்காக்கள், டாஸ்மாக்ஸ் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், பொது பூங்காக்கள் மற்றும் தொழில்துறை பிரிவுகளை மீண்டும் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு வீதம் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் ஷோபியன், குல்கம், காண்டர்பால், பாண்டிபோரா, பூஞ்ச், ரியாசி, ராம்பன் மற்றும் தோடா ஆகிய எட்டு மாவட்டங்களில் தடைகளை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைகளை மீண்டும் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஜிம்கள், விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அந்தந்த அலுவலகங்களுக்கு அவர்கள் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மத்திய பிரதேசத்தை பொருத்தளவு, ஒரு திருமணத்தில் மொத்தம் 40 பேர் கலந்து கொள்ளலாம் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் ஜிம்களை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலனையில் உள்ளது. கோவாவில் ஜூன் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே கடைகள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகளும், தினசரி மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.