தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – புதிய நிபந்தனைகள் வெளியீடு!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடிக்கான புதிய கடும் நிபந்தனை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நகைக்கடன் பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. நிபந்தைகளை வரையறை செய்ய கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனை அடிப்படையாக வைத்து நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதியானோர் மற்றும் தகுதியற்றோர் பட்டியல் வெளியானது.
இதில் மொத்தக் கடன் பெற்ற 48,84 ,726 பேரில் 35,37,693 பேர் நகைக்கடன் பெற தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். ஏராளமானோர் தகுதியற்றோர் பட்டியலில் இருந்ததால் கடன் பெற்றவர்கள் அதிருப்தி அடைந்தனர். தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி எவ்வித நிபந்தைகளும் இன்றி அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடிக்கான புதிய கடும் நிபந்தனை வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது 5 சவரனுக்கு உட்பட்ட நகைகளை இரண்டு மூன்றாக பிரித்து அடகு வைத்தவர்கள்,அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், 40 கிராமுக்கு (5 சவரன்) மேல் ஒரு கிராம் அதிகமாக நகை அடமானம் வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு நகைக் கடன்கள் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகை அடகு வைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தென்காசி மாவட்ட கூட்டுறவு வங்கியில் சிலருக்கு நகைகளை திரும்ப வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர்.