தமிழகத்தில் அனைத்து பல்கலை தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் பரவலும் வேகமாக பரவி வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை என்றும் ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தி கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து போக்குவரத்துக்கு தடை? ஷாக் ரிப்போர்ட்!
அத்துடன் 15 முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதனால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் நேரடி வகுப்புகளை நடத்தி கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளை தவிர்த்து மற்ற அனைத்து கல்லூரிகளுக்கும், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் – பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்!
இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து கல்லூரிகளிலும் செய்முறை தேர்வுகளை நடத்த மட்டும் அனுமதி என்று கூறியுள்ளார். அத்துடன் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளுக்கான தேதிகளின் பட்டியல் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார்.