ஒரு நாள் கைதியாக விருப்பமா? ரூ.500 கட்டணம்! கர்நாடகாவில் நூதன அறிவிப்பு!
கர்நாடகா மாநிலம் பெலகவி பகுதியில் அமைந்துள்ள ஹிண்டல்கா சிறையில் ஒரு நாள் கைதியாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் ரூ.500 கட்டணத்துடன் சிறையில் ஒரு கைதிக்கு கிடைக்கும் அன்றாட வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
கைதிக்கு பணம்
பொதுவாக எந்தவொரு துறையிலும் புதிய முன்னெடுப்புகளை செய்ய வேண்டுமானால் அதற்காக வியாபார யுக்தி என்று சொல்லக்கூடிய தந்திரங்கள் அவசியமானதாகும். உதரணமாக ஒரு புதிய பிஸினஸ் துவங்குவதற்கு முதலில் வாடிக்கையாளர்களை கவர வேண்டும். அதற்காக பல்வேறு நிறுவனங்கள் இலவச சலுகைகளை அளித்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பது வழக்கமாக மேற்கொள்ளப்படும் வியாபார யுக்தியாகும். சில நேரங்களில் வெளிநாடுகளில் உள்ள வியாபார நிறுவனங்கள் சில நூதனமான யுக்திகளை கையாளுவதும் உண்டு.
இந்தியாவுடன் ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திய தலிபான்கள் – உலர் பழங்கள் விலை உயருமா?
இந்த வரிசையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹிண்டல்கா சிறையில் ஒரு நாள் கைதியாக இருக்க விரும்புவர்களுக்கு ஒரு நூதன அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஒரு கைதியின் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இதில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கர்நாடகா மாவட்டத்தில் பெலகவி பகுதியில் அமைந்துள்ள ஹிண்டல்கா மத்திய சிறை அதிகாரிகள் ‘கைதியின் வாழ்வில் ஒரு நாள்’ என்ற கருத்தை முன்வைத்து ஒரு சுற்றுலாத் திட்டத்தை துவங்கியுள்ளனர். இதன் படி சாதாரண மனிதர்கள் அனைவரும் ரூ .500 கட்டணத்தில் சுமார் 24 மணிநேரம் ஒரு கைதியின் வாழ்க்கையை வாழலாம்.
இந்த புதிய முயற்சியை செயல்படுத்த அதிகாரிகள் அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். மேலும் இதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது விடியற்காலையில் எழுந்ததிலிருந்து அன்றைய தினசரி வேலைகளை செய்வது, சிறையில் சீருடை அணிவது, கைதி எண்ணைப் பெறுவது, சிறை உணவைச் சாப்பிடுவது மற்றும் கைதிகளின் அன்றாட வேலைகளாகிய தோட்டக்கலை, சமையல் மற்றும் சுத்தம் செய்தல் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சிறைக்காவலர்கள் பார்வையாளர்களை அதிகாலை 5 மணிக்கு எழுப்புவார்கள். அதன் பிறகு அவர்கள் காலை தேநீர் அருந்துவதற்கு முன்பு தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். காலை உணவு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வழங்கப்படுகிறது. காலை 11 மணிக்கு மதிய உணவிற்கு சாதம் மற்றும் சாம்பார் கொடுக்கப்படும். அடுத்த உணவு இரவு 7 மணிக்கு கிடைக்கும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை, கைதிகளுக்கு அசைவ உணவு வழங்கப்படுகிறது. பார்வையாளர்கள் வார இறுதி நாட்களில் கைதிகளுடன் சேர்ந்தால், அவர்களுக்கும் சிறப்பு உணவை ருசிக்க வாய்ப்பு கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே நேரத்தில் வழக்கமான வேலைகள் முடிந்த பிறகு, பார்வையாளர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து தரையில் தூங்க வேண்டும். இந்த சிறை சுற்றுலா பயணிகள் ஒருவேளை சில பயங்கரமான குற்றவாளிகளிடம் கூட இருக்க வாய்ப்புகள் கிடைக்கலாம். இந்த பட்டியலில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் 29 கைதிகள் அடங்குவர். இந்த கைதிகளின் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குற்றங்களைச் செய்வதிலிருந்து மக்களைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.