தீபாவளியை முன்னிட்டு ‘இந்த’ இடங்களில் மேலும் 2 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள் என்பதால் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். பயணிகளுக்கிடையே கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 2 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதனால் பொது போக்குவரத்துகளில் பயணிகளின் கூட்டம் அலை மோதும். மேலும் பயணிகளுக்கிடையே கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேலும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – பெங்களூரு, கொச்சுவேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது
இதையடுத்து அக்டோபர் 25ம் தேதி அன்று நாகர்கோவில் – பெங்களூர் சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 26ம் தேதி அன்று காலை 10.15 மணிக்கு பெங்களூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் பெங்களூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் நள்ளரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதே போல் அக்டோபர் 25ம் தேதி அன்று கொச்சுவேலி – தாம்பரம் சிறப்பு ரயில் திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேலியில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 26ம் தேதி அன்று தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து காலை 10:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் ஆனது திருநெல்வேலி, திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், சிவகங்கை, அருப்புக்கோட்டை, மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு கடலூர் துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.