குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை – தமிழகத்தில் யாருக்கெல்லாம் கிடையாது?
தமிழக அரசின் அறிவிப்பின் படி பெண்களுக்கான மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்க வாய்ப்புகள் இல்லை என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உரிமைத்தொகை:
தமிழக அரசின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உரிமைத்தொகை பற்றிய அறிவிப்பானது கடந்த மார்ச் 20, தேதி அன்று நடந்த தமிழக பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் நிதியாண்டின் செப்டம்பர் 15ம் தேதியான அண்ணா பிறந்த தினம் முதல் உரிமைத்தொகை திட்டம் அமலுக்கு வர உள்ளது. முழுதாக 2 வருட காத்திருப்புக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியானதால் பெண்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் தான் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால் பெண்கள் மத்தியில் சற்று அதிருப்தி எழுந்தது. அதாவது, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள், சொந்தமாக வீடு, நிலம் வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் கார் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வைத்திருப்பவர்களுக்கெல்லாம் உரிமைத்தொகை வழங்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளிவராத நிலையில் அரசு தரப்பு அதிகாரிகள் இந்த கருத்தை முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.