தமிழக ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு – அரசு உத்தரவு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையை ஒவ்வொரு மாதம் 10ம் தேதிக்குள் அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 (ரூ.2000 + ரூ.2000) மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தற்போது தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு அரசின் கூடுதல் செயலாளர் உத்தரவு தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.
வாகன கடன் தவணைக்கு (EMI) 6 மாத கால அவகாசம்? ஜூன் 28 இல் லாரி ஸ்டிரைக்!
அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் மாதத்திற்கு 10 நியாய விலை கடைகளில் ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியரை தொடர்ந்து மாவட்ட கூடுதல் ஆட்சியர், உணவுப் பொருள் வழங்கல் துறையின் கூடுதல் ஆணையர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 10 ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் 30 நியாய விலை கடைகளில் மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் துணை ஆட்சியர், கோட்டாட்சியர் மாதம் தோறும் 20 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நியாய விலைக் கடைகளில் குறிப்பிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்கள், ஊழியர்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இதற்காக ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் தனித்தனியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2015-16 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. அனைத்து நியாய விலைக்கடைகளில் கூட்டுறவு சங்க பதிவாளருக்கு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் நேரடியாக தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.