தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், போலீசார் அதிரடி நடவடிக்கை – வழக்குகள் பதிவு, அபராதம் விதிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நேரத்தில் வெளிவரும் மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர முழு ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜனவரி 6ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிவர வேண்டும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் வார இறுதி ஊரடங்கு ரத்து? அரசு ஆலோசனை!
இந்த ஊரடங்கு நேரத்தில் சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்த 10,000 காவல் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு நேரத்தில் நெறிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுபவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மத்திய அரசு அறிவிப்பு!
இதனை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு நேரத்தில் 136 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி வந்த 153 இருசக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள் மற்றும் 02 இலகுரக வாகனம் உள்ளிட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று மட்டும் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.10,62,600 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.10,500 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முழு ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.