சென்னையில் சித்த மருத்துவ பல்கலை, 188 புதிய ஆம்புலன்ஸ்கள் – அமைச்சரின் அறிவிப்புகள்!
சென்னையில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் எனவும், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
புதிய அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பல புதிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் (செப்டம்பர் 2) சட்டமன்ற கூட்டத்தொடரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு புதிய அறிவிப்புக்களை கொடுத்துள்ளார். அந்த அறிவிப்பில் சென்னையில் புதிதாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் கட்டப்படுவது, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!
முன்னதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மானிய கோரிக்கைக்கு பதிலளித்த பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுமார் 110 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தின் மூலம் 1000 சிறப்பு முகாம்கள் மேம்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில், இந்தியாவில் முதல் முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னையில் அமைக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் ரூ.2.6 கோடி செலவில் சுமார் 40 டயாலிசிஸ் கருவிகள் வாங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு ரூ.1,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 108 ஆம்புலன்ஸ் சேவைகள் ரூ.69.18 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு, கூடுதலாக 188 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும். மேலும் ரூ.8.09 கோடி செலவில் 12 அரசு மருத்துவமனைகளில் உயர் மருத்துவ பட்டய படிப்புகள் ஏற்படுத்தப்படும். சென்னை சஞ்சீவராயன்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
2015 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் அரசின் திட்டத்துக்கு, ரூ.7 கோடி செலவில் 10 ஊடுகதிர் வாகனங்கள் வழங்கப்படும். இதனுடன் நகர்ப்புறங்களில் உள்ள 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.45 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடங்கள் வடிவமைக்கப்படும். தவிர தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ரூ.2.35 கோடி செலவில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகுகள் ஏற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.