மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாநில அரசு தொடங்க உள்ளது.
பொதுத்தேர்வுகள்:
2020 புதிய கல்விக் கொள்கையின் படி பள்ளி மாணவர்களுக்கு பல கட்டங்களில் பொது தேர்வுகள் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. பத்தாம் வகுப்புக்கு முன்னதாகவே 5 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது மகாராஷ்டிரா அரசானது தனது மாநில கல்வித்துறையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக விதிக்கப்பட்டிருந்த தடுப்புக் கொள்கையை தற்போது ஏப்ரலில் இருந்து நீக்கியுள்ளது. கல்வி கொள்கையின் மாற்றங்களின் படி புதிய நடைமுறைகளை நிர்ணயித்து தேர்வுக்கான விவரங்களை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
50 மதிப்பெண் தேர்வுகளில் 18 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்றும், 60 மதிப்பெண் தேர்வுகளில் 21 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் தோல்வி அடைந்ததாகவே கருதப்படுவார்கள். மேலும் புதிய கல்வி ஆண்டிற்கு முன்னதாக ஜூன் மாதத்தில் மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். மகாராஷ்டிரா அரசால் நடத்தப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த புதிய நடைமுறை பொருத்தும் என்று கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளுக்கு இந்த நடைமுறைக்கான புதிய விதிமுறைகளையும் அறிக்கையாக தெரிவித்துள்ளார்.