ஓராண்டில் தமிழக அரசுப் பணியில் எந்தெந்த பதவிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன, அதற்கான தேர்வு எப்போது, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும், நேர்முக்தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற விவரங்கள் எல்லாம் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி கடந்த 5 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது.
இதன்மூலம், அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராவதற்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு..
2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இந்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம். அதன்படி, இந்த ஆண்டு குரூப்-2 பதவிகள், தொழிலாளர் அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி தோட்டக்கலை அலுவலர், மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், அரசு உதவி வழக்கறிஞர், அருங்காட்சியக காப்பாட்சியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர் என 23 விதமான பதவிகளில் 3,235 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுமுறை, பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
வழக்கமாக, டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில், என்ன தேர்வு, எப்போது அறிவிப்பு, எப்போது தேர்வு, தேர்வு முடிவுகள், நேர்முகத்தேர்வு ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்த முறை, தேர்வு, அதற்கான அறிவிப்பு, தேர்வு நாள் ஆகியவை மட்டுமே இடம்பெற்றுள்ளன. தேர்வு முடிவு நாள் விவரம் இடம் பெறவில்லை.