சென்னை உயர் நீதிமன்றம் பிரதமரின் வீட்டு வசதி திட்ட மானியத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்த முழு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு:
மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா வீட்டு வசதித் திட்டம், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சொந்த வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னையை அடுத்த சோழவரம் பகுதி வாழ் மக்களுக்கு வழங்கப்பட மானிய தொகையில் 54 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து அப்பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்தார்.
இவ்வழக்கானது தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் தலைமையில் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் அளித்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு நலத்திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையா? புகார் அளித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? என நீதிகள் கேள்வி எழுப்பினார்கள். பின் இம்முறைகேடு குறித்த விசாரணையின் முழு அறிக்கையையும் விரைவில் தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. பிறகு இவ்விசாரணையானது ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.