தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – ஏப்ரல் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்!
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வழங்கப்பட்டு வரும் செறிவூட்டப்பட்ட அரிசியை, தற்போது தமிழகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்க உள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி
நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களிடம் இரும்புச்சத்து குறைபாடு உள்ளதால் ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களால் பாதிப்படைகிறார்கள் என மத்திய அரசு ஆய்வு ஒன்றில் கண்டறிந்தது. அதனால் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்தது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி-12 உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது.
இதில் இருக்கும் இரும்புச் சத்து ரத்த சோகையை தடுக்கிறது, அத்துடன் போலிக் அமிலம் கருவளர்ச்சி மற்றும் ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் வைட்டமின் பி-12 நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில், திருச்சியில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இதே போன்று விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கும் ரேஷன் கடைகளில் அடுத்த மாதம் முதல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் செறிவூட்டப்பட்ட அரிசியை சிலர் பிளாஸ்டிக் அரிசி என கூறி வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதனால் செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்பாடு குறித்து நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.