தமிழகத்தில் தீவிரமெடுக்கும் டெங்கு காய்ச்சல் – தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சல்:
தமிழகத்தில் கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. அண்மையில் சென்னையில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். அதே போல மற்ற மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவலாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சல் இருந்தால் NS1 பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் வார்டுகளை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் ரத்தம் போதிய அளவில் இருப்பு நிலை உள்ளதா என்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.