இந்திய மக்கள் பெரும்பான்மையானவர்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் என்ன ஆகும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வங்கி கணக்கு
இந்திய மக்கள் அரசு சார்ந்த சலுகைகளை பெறவும், வருமானத்தில் சிறிய பகுதியை சேகரிக்கவும் வங்கி கணக்கு அவசியமாகும். அதனால் மக்கள் பலர் வங்கி கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். பல தேவைகளுக்கு பயன்பெறும் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைக்காமல் இருந்தால் என்ன ஆகும், வங்கிகளின் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுமா என பார்க்கலாம். வங்கிகள் தங்களுடைய சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாமல் இருந்தால், அபராதம் விதிக்கின்றனர்.
இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபாடு அடையும், ஒரே வங்கியாக இருந்தாலும் வெவ்வேறு கிளைகளுக்கு இடையே இந்த தொகை மாறுபடும். இது குறித்து 2014 ஆம் ஆண்டு ஆர்பிஐ சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் வங்கிகள் அபராதம் விதிக்க உரிமை உண்டு, அதே சமயம் வாடிக்கையாளர்களின் சிரமம், கவனக்குறைவு, பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்தப்பட்ச இருப்புத்தொகையை பராமரிப்பதில் எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அதே விகிதத்தில் அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமில்லாமல் அபராதங்கள் சேமிப்புக் கணக்கை எதிர்மறையான நிலைக்குத் தள்ளாமல் இருப்பது அவசியம் ஆகும்.