வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு – மார்ச் 15 வரை காலக்கெடு நீட்டிப்பு!
நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழலுக்கு மத்தியில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் 15 வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது.
காலக்கெடு நீட்டிப்பு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் 15ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக வருமான வரி செலுத்துபவர்கள் தங்களது கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் இந்த காலக்கெடுவை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ட்வீட் செய்துள்ள வருமான வரித்துறை, ‘கொரோனா தொற்று காரணமாக வரி செலுத்துவோர் மற்றும் பங்குதாரர்கள் தெரிவிக்கும் சிரமங்கள் மற்றும் ஐடி சட்டம், 1961ன் கீழ் AY 2021-22க்கான தணிக்கை அறிக்கைகளை மின்-தாக்கல் செய்வதை கருத்தில் கொண்டு AY 21-22க்கான தணிக்கை அறிக்கைகள் மற்றும் ITRகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை CBDT நீட்டிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. தவிர, 2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானத்தைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு, சட்டத்தின் பிரிவு 139 இன் துணைப் பிரிவு (1) இன் கீழ் நவம்பர் 30 இல் இருந்து மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வருமான வரி அறிக்கைகள் தவிர, பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் நிதி அமைச்சகத்தின் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய காலக்கெடு பிப்ரவரி 15, 2022 ஆகும். இதற்கு முன்னதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் கூறியதை அடுத்து மீண்டுமாக இதற்கான காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.