தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 243 ஆசிரியர்களுக்கு செய்யும் துரோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அரசாணை 243:
தமிழகத்தில் அரசாணை 243 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம் முன்பு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அரசாணை 243 ன் படி பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்த/ பதவி உயர்வு பெற்ற நாள் தான் தகுதி நாளாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியவருடன் 10 ஆண்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக மற்றும் 6 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவருக்கும் நிலவும் போட்டியில் 7 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும். அதன்படி 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பயனடைய முடியும் எனவும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் இதனை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.