பான் கார்டு தொலைந்து விடும் பட்சத்தில் புதிய பான் கார்டுக்கு எவ்வாறு அப்ளை செய்வது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு:
இந்திய குடிமகனின் வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என முக்கிய அனைத்து தேவைகளுக்கும் பான் கார்டு முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. உங்களது பான் கார்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை உடனடியாக திருத்தம் செய்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் பான் கார்டு மூலமாக உங்களது பணம் திருடப்பட வாய்ப்பு இருப்பதால் பான் கார்டினை அவசிய தேவைக்காக மட்டுமே பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தற்போது எப்படி பான் கார்டு தொலைந்து விடும் பட்சத்தில் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்த அறிவிப்பை காணலாம்.
முதலில் பான் கார்டு தொலைந்ததும் வருமான வரித்துறையின் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி இ-பான் அல்லது டிஜிட்டல் பதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, tin.nsdl.com என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று சேவைகள் என்பதை கிளிக் செய்து பான் என்னும் விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும். அதன் பின்னர் உங்களுக்கு புதிய பக்கம் திறக்கும். அதில் கொடுக்கப்பட்டுள்ள பான் கார்டின் மறு பதிப்பு என்பதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும் என்பதை தேர்வு செய்யவும். பின்னர், ஆன்லைன் பான் விண்ணப்பம் என்கிற புதிய பக்கம் திறக்கப்படும். அதில் விண்ணப்ப வகை என்கிற பகுதிக்கு கீழ் பான் கார்டில் திருத்தம் உள்ளிட்ட வசதிகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களது விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், பான் விண்ணப்ப படிவத்துடன் தொடரவும் என்பதனை கிளிக் செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும். பின்னர், புதிய பான் கார்டு பெறுவதற்கான கட்டணத்தை செலுத்தி புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்