தமிழக அரசின் வட்டாரக்கல்வி அதிகாரிகள் கவனத்திற்கு – பணி மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் பணிபுரிந்து வரும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் டிச.28ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று டிச.22ம் தேதி கடைசி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி மாறுதல் கலந்தாய்வு:
தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களின் கீழ் பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பணி மாறுதல் கலந்தாய்வு ஏதும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது BEO அதிகாரிகளுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று – மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு! பொதுமக்கள் அச்சம்!
அதில் தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் 30.11.2021 நிலவரப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்கள் கட்டாயம் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் மற்றவர்களும் கலந்துகொள்ளலாம். நிகழ் கல்வியாண்டில் 2021 – 22 ஓய்வு பெறும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இந்த கலந்தாய்வானது முதலில் மாவட்டத்திற்குள்ளாகவும், பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் நடைபெறும்.
கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கு முன்னுரிமை அவர்கள் BEO அதிகாரியாக பணி நியமனம் பெற்ற தேதி அடிப்படையில் வழங்கப்படும். மாறாக அவர்கள் நேரடியாக BEO அதிகாரியாக பணியில் சேர்ந்திருந்தால் அவர்கள் தற்போது பணியாற்றும் ஒன்றியத்தில் பணியில் சேர்ந்துள்ள நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை வழங்கப்படும். நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து BEO அதிகாரியாக பதவி உயர்வு பெற தகுதி உடையவர்கள் தற்போது தலைமையாசிரியராக பணியாற்றிய பகுதியை தேர்வு செய்தல் கூடாது. தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Online மூலம் Branch மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!
இந்த பணி மாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்று டிச.22ம் தேதி கடைசி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திருத்தம் மற்றும் முறையீடு ஏதேனும் இருப்பின் அதனை வரும் டிச.24ம் தேதி செய்துகொள்ளலாம். இறுதி மாறுதல் முன்னுரிமை பட்டியல், தகுதி வாய்ந்தோர் பட்டியல் மற்றும் காலிப்பணியிட பட்டியல் வரும் டிச.27ம் தேதி வெளியிடப்படும். அதனை தொடர்ந்து டிச.28ம் தேதி காலை மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வும், பிற்பகல் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான கலந்தாய்வும் நடைபெறும். மேலும் டிச.29ம் தேதி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் இருந்து BEO பணிக்கு பதவி உயர்வு பெறுவோருக்கான கலந்தாய்வு நடைபெறும்.