தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா – அச்சத்தில் பெற்றோர்கள்!
சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களை தனிமைபடுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பாதிப்புகள் தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது பரவி வரும் தொற்று மூன்றாம் அலை பரவல் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் இரவு நேர மற்றும் வார இறுதி தினமான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் பிற நாட்களில் அனைத்து பொது இடங்களுக்கு செல்வத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் நலன் கருதி 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள டீச்சர்ஸ் காலணி மறைமலை அடிகள் தெருவில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்ற மாணவர்களும், பெற்றோர்களும் அச்சம் அடைந்தனர்.
கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி – அரசு அறிவிப்பு!
இதனையடுத்து முதல் கட்டமாக 120 மாணவர்களுக்கு, அடுத்ததாக 153 மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முடிவில் பரிசோதிக்கப்பட்டதில் 26 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் வேறு வகுப்பறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.