தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி – ஜூன் 28 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 27 மாவட்டங்களில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பேருந்துகள் இயக்கம்
கொரோனா 2 ஆம் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மே 10 முதல் ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. இதனிடையே கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதமானது சரிவை கண்டுள்ளதால், சில தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்தது. அந்த வகையில் ஒவ்வொரு கட்டமாக அளிக்கப்பட்ட தளர்வுகளின் படி, அத்தியாவசிய பொருட்களின் கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், அரசு அலுவலகங்கள், சலூன்கள், மதுக்கடைகள், மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு அறிவிப்பு – விருப்ப தேர்வு வாய்ப்பு!
இதில் கடந்த வாரம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளில், கொரோனா பாதிப்பு கணக்கீட்டின் அடிப்படையில் வகை 3 ல் பிரிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் 50% இருக்கை வசதிகளுடன் பேருந்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டுமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு குறைவாக உள்ள மற்ற மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கத்திற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் ஏற்கனவே பேருந்துகள் செயல்பட்டு வந்த 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 28 ஆம் தேதி முதல் மீண்டுமாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசின் அறிவிப்பின் படி, வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களில் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி முதல், மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் 50% இருக்கைகளுடன் மீண்டுமாக துவங்க உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.