இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
செமஸ்டர் தேர்வுகள்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் 3 மாதத்திற்கும் மேலாக பூட்டப்பட்டு உள்ளன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அறிவித்து உள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்யுமாறு கோரிக்கை எழுந்தது. ஆனால் அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பல்வேறு கல்லூரிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளதால் தேர்வுகள் நடைபெறுவது கடினம் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்தே தேர்வுகளை எழுத வைக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. ஆன்லைன் தேர்வுகளை 4ம் வருட (இறுதியாண்டு) மாணவர்களுக்கு மட்டும் ஜூலை மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற ஒன்று முதல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு முடிந்தவுடன் அரசின் ஆலோசனைக்கு ஏற்ப நேரடியாக தேர்வுகள் நடத்தப்படலாம். வழக்கமாக 3 மணிநேரம் நடைபெறும் தேர்வு நேரத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.