தமிழகம் முழுவதும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு – கல்வித்துறையின் முடிவு என்ன?
தமிழகத்தில், 1 முதல் 12ம் வகுப்பு வரை 2022-23ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜூன் 13ம் தேதியை பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் மீண்டும் திறப்பு:
கொரோனா எதிரொலியாக கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கற்றல் முறையில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து தாக்கம் குறைய தொடங்கியதால் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வும், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும்.
TN Job “FB Group” Join Now
ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் இம்மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.அதன்படி, 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5ம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ம் தேதி ஆரம்பித்து 31ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. மேலும் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் பொதுத்தேர்வுகள் முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கிறார்கள். இந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஜூன் 17 முதல் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கிடைக்காது என்பதால் தங்களுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த கடிதத்தில், 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்தபடி ஜூன் 13 ந் தேதி பள்ளிகளை திறந்து மாணவர்கள் படிப்பை உறுதி செய்திட வேண்டும். ஏற்கனவே 800 நாட்கள் கொரோனா காலகட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அடிப்படை கல்வியை மறந்துவிட்டார்கள், இந்நிலையில் சில ஆசிரியர் சங்கங்கள் கோடை விடுமுறை இன்னும் வேண்டும் என்று கேட்பது வேதனையாக இருக்கிறது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் ஜூன் 13ந் தேதியே பள்ளிகளை திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.