தனியார் இசேவை மையங்களுக்கு முக்கிய எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
தற்போது இ சேவை மையங்கள் வாயிலாக பல்வேறு வகையான அரசின் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் சான்றிதழ்கள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு உரிய கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தனியார் இ சேவை மையங்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ளார்.
இ சேவை மையம்
மதுரை மாவட்டத்தில் 413 பொது இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக பொது மக்களுக்கு வருவாய்த்துறை சான்றுதழ்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதிய சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் மேற்கண்ட சான்றிதழ்களை தாங்கள் வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது கைபேசி வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மின் கட்டண எண்ணுடன் ஆதார் இணைப்பு – இன்றுடன் (ஜன.31) கால அவகாசம் முடிவு!!
மேலும் இது தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசின் பல்வேறு வகையான சான்றிதழ்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு விண்ணப்பித்துக் கொள்ள http://www.tnesevai.tn.gov.in/Citizen/ என்ற இணையதள முகவரி மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்பிக்க http://tamilnilam.tn.gov.in/Citizen/ என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான கட்டணத்தை Internet Banking அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களுக்காக உருவாக்கப்பட்ட Citizen Login வசதியினை தனியார் கணினி மையங்கள் அல்லது ஜெராக்ஸ் கடைகள் வியாபார நோக்கில் பயன்படுத்தக்கூடாது என்றும் இதனை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார்களை தெரிவிக்க [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 1100 மற்றும் 18004251997 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.