‘விண்ணைத்தாண்டி வருவாயா’ நடிகர் பிரதீப் கோட்டயம் திடீர் மாரடைப்பால் மரணம் – ரசிகர்கள் இரங்கல்!
மலையாள சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் பிரதீப் கோட்டயம் இன்று (பிப்.17) அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இந்த தகவல் திரையுலக பிரபலங்களை அதிர்ச்சிக்குளாக்கி இருக்கிறது.
பிரதீப் கோட்டயம்
கடந்த 2001ம் ஆண்டு ‘ஈ நாடு எனலே வாரே’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கோட்டயம் பிரதீப் இதுவரை 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவான ஒரு வடக்கன் செல்ஃபி, குஞ்சிராமாயணம், வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில், கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன், அமர் அக்பர் ஆண்டனி, தட்டத்தின் மறாயது போன்றவை மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றிருந்தது.
அதே போல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கோட்டயம் பிரதீப் தொடர்ந்து ராஜா ராணி, நண்பேன்டா, தெறி உள்ளிட்ட சில திரைப்படங்களில் குணசித்திர கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்போது 61 வயதான நடிகர் கோட்டயம் பிரதீப், இன்று (பிப்.17) திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோட்டயம் பிரதீப் இன்று (பிப்.17) அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவரது திடீர் மரணம் மலையாள திரையுலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவை தொடர்ந்து முன்னணி நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் சமூக வலைதளங்களில் அவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தி இருக்கிறார். மேலும் பல்வேறு மலையாள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நடிகர் கோட்டயம் பிரதீப்பிற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.