நீட், ஜேஇஇ தேர்வுகளை கியூட் தேர்வுடன் இணைக்க திட்டம் – யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் விளக்கம்!
நீட், ஜே.இ.இ. தேர்வுகளை கியூட் தேர்வுடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கியூட் தேர்வை நீட், ஜே.இ.இ. தேர்வுகளுடன் இணைப்பது எப்போது என்பது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் நேற்று முன்தினம் விளக்கம் அளித்துள்ளார்.
கியூட் தேர்வுடன் இணைக்க திட்டம்:
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளில் சேருவதற்காக ‘கியூட்’ என்ற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதல் முறையாக, கடந்த ஜூலை மாதம் இத்தேர்வு நடந்தது. ஆனால், தொழில்நுட்ப குளறுபடிகள் காரணமாக, பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பல இடங்களில், தேர்வு மையத்துக்கு வந்த பிறகு தேர்வு ரத்தானதை அறிந்து மாணவர்கள் திரும்பி சென்றனர். இதன் 4ம் கட்ட தேர்வு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்கிடையே, மருத்துவத்திற்கு நீட் தேர்வு, என்ஜினீயரிங் படிப்புக்கு ஜே.இ.இ மத்திய பல்கலைக்கழகங்களுக்கு கியூட் தேர்வு என தனித்தனியாக நுழைவுத்தேர்வு எழுத வேண்டி இருப்பதால், மாணவர்களின் சுமையை குறைக்க இந்த தேர்வுகள் ஒன்றாக இணைக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜெகதீஷ் அளித்த பேட்டியில், கியூட் நுழைவுத் தேர்வின் முதல் 2 கட்டங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் பின்னடைவு அல்ல. அவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். இனிமேல், அந்த தவறுகள் நடக்காமல் தடுக்கப்படும். இதனால், தேர்வு நடைமுறையிலோ அல்லது விரிவாக்கத் திட்டத்திலோ எந்த பாதிப்பும் இருக்காது. மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுதும் சுமையை குறைப்பதற்கான தேசிய கல்விக் கொள்கையின்படி, ஒரே பொது நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய திட்டம் என்பதால் சரியாக திட்டமிட வேண்டும். இதற்கான சிறப்பு நிபுணர் குழு இம்மாத இறுதியில் அமைக்கப்படும். எனவே, கியூட் தேர்வுடன் ஜேஇஇ, நீட் தேர்வுகளை உடனடியாக இணைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்தார்.
4ம் கட்ட தேர்வு:
கியூட் 4ம் கட்ட தேர்வு இன்று தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 3.60 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 4ம் கட்டத் தேர்வில், வேறு நகரங்களில் தேர்வு எழுத மையங்கள் கோரிய 11,000 மாணவர்களுக்கு வரும் 30ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. முதலில் அனைத்து கட்ட தேர்வுகளும் 20ம் தேதியுடன் முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 30ம் தேதி முடிய உள்ளது. இதனால், இம்முறை கியூட் தேர்வுகள் 6 கட்டங்களாக பிரித்து நடத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்