டிவி சேனல்கள் நடத்த தடை – மத்திய அரசின் அதிரடி உத்தரவு! சுற்றறிக்கை வெளியீடு!
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தனியார் துறையுடன் சேர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் துவங்கி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கக்கூடாது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இது குறித்த முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தொலைக்காட்சி:
இந்தியாவில் மத்திய அரசின் தகவல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மத்திய அரசின் பிரசார் பாரதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதே போல மாநில அரசுகளும் தங்களுக்கென சில தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிராய் எனும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொலைக்காட்சி சேனல்களை நடத்த அனுமதிக்க கூடாது என்று பரிந்துரை செய்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து தற்போது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தொலைக்காட்சி சேனல்கள் நடத்தவும் அது தொடர்பான சேவைகளுக்கும் தடை விதித்துள்ளது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நேரடியாக எந்த தொலைக்காட்சி சேனல்களையும் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் அது சார்ந்த சேவைகள் அனைத்தும் பொதுத்துறை அமைப்பான பிரசார் பாரதி மூலமாக மட்டுமே ஒளிபரப்ப வேண்டும். தற்போது மாநில, யூனியன் பிரதேச அரசு துறைகளுக்கு என தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருந்தால் அதனை 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள், பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தற்போது மாநில அரசுகள் நடத்தும் கல்வி சேனல்களை பிரசார் பாரதியுடன் கீழ் தொடர்ந்து இயக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.