3 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் இடமாற்றம் – தேர்தல் அதிகாரி உத்தரவு!
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட மாவட்டங்களுக்கு தற்போது தேர்தல் நடத்தப்பட இருப்பதால், கடந்த 3 ஆண்டு காலமாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் அளித்து தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
ஊழியர்கள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் கொரோனா பரவல் காரணமாக சில மாவட்டங்களுக்கு மட்டும் நடத்தப்படவில்லை. தவிர தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட சில மாவட்டங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுடன் அப்போது இணைக்கப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் நடைபெறாமல் விடுபட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கும் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அந்த வகையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட மாவட்டங்களில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊழியர்களை இடமாற்றம் செய்வதற்கான பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் கூறுகையில், ‘தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அப்பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பணி செய்து வரும் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த உத்தரவின் படி ஊழியர்களை இடமாற்றம் செய்யாமல் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது. இப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டால் தான் ஊழியர்கள் புதிய இடங்களில் சேர்ந்தவுடன் அங்குள்ள நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே இந்த மாவட்ட நிர்வாகங்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். இதனிடையே ஊழியர்கள் விவரங்கள் பட்டியலிட்டு வருவதாகவும், இப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.