தமிழகத்தில் இன்று (நவ. 16) உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (நவ. 16) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருக்கிறது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளை போல இல்லாமல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்து இருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. அதன் காரணமாக பல மாவட்டங்களில் மழை அதிகமாக இருந்தது. தற்போது பல மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அரசு மழையால் ஏற்பட்ட சேதாரங்களை சரி செய்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று (நவ. 16) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுதினம் வலுப்பெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதனால் தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (நவ 16) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.