தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் 10 -12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – அமைச்சர் தகவல்!
கொரோனா 3ம் அலைத்தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் பிப்ரவரி மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்காக மீண்டும் திறக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா 2ம் அலைப்பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் 2 கட்டமாக திறக்கப்பட்டது. இதனையடுத்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் வரை வகுப்புகள் முழுமையாக நடத்தப்பட்டு வந்த நிலையில், மீண்டும் கொரோனா 3ம் அலைப்பரவல் பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கியது. இதனால் இம்மாத துவக்கத்தில் இருந்து பள்ளிகள் மீண்டுமாக அடைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை மெதுவாக வீழ்ச்சியடைய துவங்கி இருக்கிறது.
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் இரவு & வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து? முதல்வர் இன்று ஆலோசனை!
இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜன.27) ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார். இதனிடைய, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிப்ரவரியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கூறும் போது, ‘ஏற்கனவே, பள்ளிகள் மாணவர்களின் செயல்திறன் மதிப்பீட்டை நடத்தி வருகின்றன. அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்குள் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க பரிந்துரைத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கிறது என்று கூறிய அவர் திட்டமிட்டபடி 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.