பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் நிதிநிலைமைக்கு ஏற்ப கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பகுதி நேர ஆசிரியர்கள்:
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஓவியம், நடனம், கணினி உள்ளிட்ட கலை பாடங்களை கற்பிக்க சுமார் 12,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களது ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி தற்போது சென்னை டிஜிபி வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
திமுக தலைமையிலான அரசு தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.