தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு கடந்த ஜூன் 13ம் தேதி அன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் 13000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை அரசு உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் பணியிடங்கள்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் தேவைப்படுவதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் பணி புரிய ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான தேர்வு வருகிற ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு முதல் தேர்வு நடத்தப்படாமல் உள்ளதால் அரசு பள்ளிகளில் சுமார் 13000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கோவையில் நாளை (ஜூன் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அத்துடன் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக முதற்கட்டமாக 9494 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தற்காலிகமான முறையில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட வேண்டும் என்று விஜயகாந்த் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு கடும் கண்டனத்துக்குரியதாக தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 2013, 2014, 2017, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் நிரந்தர பணி வழங்கப்படாமல் உள்ளது. அதனால் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு உடனடியாக அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.