தமிழக பள்ளி மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு – புதிய அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சூழ்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
புதிய அட்டவணை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனால் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள், தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைத்தனர். மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு எந்த தேர்வும் எழுதவில்லை. மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் கொரோனா மூன்றாவது தாக்கம் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் நேரடி கற்றல் முறை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 19ம் தேதி நடைபெற இருந்த முதல் திருப்புதல் தேர்வு , பள்ளிகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் பள்ளி கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது.
பிப்ரவரி 6ம் தேதியன்று ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – அரசு அனுமதித்துள்ள தளர்வுகள் இதோ!
அந்த வகையில் 10ம் வகுப்பிற்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும். இதனை தொடர்ந்து இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்புக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்திலோ பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.