தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – CEO அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது துவங்கியுள்ள புதிய 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகளுக்காக ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை
கொரோனா பேரலை காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் துவங்கி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வந்தது. எனினும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலையால் பள்ளிகள் மீண்டுமாக மூடப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு சென்றுள்ள நிலையில், புதிய மாணவர் சேர்க்கை பணிகளுக்காக, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகளின் படி, 2020-22 ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 மற்றும் பிற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் 28.06.2021 முதல் துவங்க உள்ளது. அந்த வகையில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையிலான மாணவர் சேர்க்கை பணிகளுக்காக பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் எவ்வித புகார்களும் இன்றி மேற்கொள்ளப்படவேண்டும். மாணவர் சேர்க்கை விவரங்களை ஒவ்வொரு நாளும் EMIS இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் 1 முதல் 12 வரையுள்ள மாணவர்களின் தேர்வு மதிப்பீடுகளை விரைந்து முடிக்க வேண்டும். தவிர மாணவர்கள் அனைவருக்கும் இலவச பாட புத்தகங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் பள்ளி வளாகம், வகுப்பறைகள், தண்ணீர் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்து பராமரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதலாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வழியாக நடத்தப்படும் பாடங்களை படித்து பயன் பெறுமாறு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.