தமிழக ரேஷன் கடை காலிப்பணியிடங்கள் – பணி நியமனம் எப்போது? அமைச்சர் பதில்!
சென்னை இன்று (மார்ச் 17) கூட்டுறவுத்துறை பண்டகசாலையின் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரேஷன் கடை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஆண்டு தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. சுமார் 5,578 விற்பனையாளர் மற்றும் 925 எடையாளர் என மொத்தமுள்ள 6,503 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.
இதற்கான நேர்காணல் முடிவடைந்துள்ள நிலையில் பணி நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் புதிய நியாய விலை கடையை அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பண்டக சாலைக்கு சொந்தமான நியாய விலை கடை சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் ரேஷன் கடையில் உள்ள 6,503 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான மதிப்பீடு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தகுதியுள்ள பணியாளர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.