தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா – பெற்றோர்கள் அச்சம்! பள்ளிகள் மூடப்படுமா?
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதில் படிப்படியாக பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டது. இதனால் தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக குறைந்துள்ளது. எனவே மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அரசு சார்பில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டது.
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுக்கு புதிய விதிகள் – ஏப்ரல் 1, 2022 முதல் அமல்!
அதன்படி பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் தொடங்கி உள்ளன. பெற்றோர்கள் அச்சமின்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கேட்டுக்கொண்டார். முதல் நாளில் 80% மாணவ, மாணவிகள் வகுப்புகளில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை கொரோனா பரவலினால் பள்ளிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் முதல் நாளிலேயே தூத்துக்குடி மாவட்ட பள்ளியில் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியானதால் அப்பள்ளி மூடப்பட்டது.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது – 385 ஆசிரியர்கள் தேர்வு!
அதனை தொடர்ந்து தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அம்மாணவி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதனால் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட 2 நாளிலேயே மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.