தமிழகத்தில் நவம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு, பள்ளிகள் திறக்க அனுமதி – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் பள்ளிகள் திறப்பு உட்பட பல்வேறு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழக அரசு வெளியிட்ட உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி, அரசு காலிப்பணியிடங்கள் – முதல்வர் முக்கிய ஆலசோசனை!
மேலும் அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணிவரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது. அதே போன்று, அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படுகிறது.
1-11-2021 முதல் அமலுக்கு வரும் கூடுதல் தளர்வுகள்:
- அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.
- திரையரங்குகள் நூறு சதவிகிதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
- ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர்சாதன பொது பேருந்து போக்குவரத்து, நூறு சதவிகிதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், 5150, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் / மையங்கள் நூறு சதவிகிதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.